மன்னாரில் தொடர்பின்றி சிக்கித் தவிக்கும் 310 மக்கள்
30 Nov,2025
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தினால், சுமார் 310 நபர்கள் எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள், மரங்களிலும், கட்டடங்களின் கூரைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பகுதியின் கள நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக நேற்று, மன்னார் - மாந்தை பகுதியில் உள்ள கூராய் கிராமத்தில் 40 பேர் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இராணுவப்படை மற்றும் விமான படையினரின் உதவி நாடப்பட்ட போதும் அப்பகுதியில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக அவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், தற்போது, 310 மக்கள், மன்னாரில் தொடர்பின்றி அனர்த்தத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.