திருகோணமலை மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
22 Nov,2025
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றது.
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு, மேளதாளங்களோடு,மலர்தூவி விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அடுத்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்,குடும்ப உறுப்பினர்கள்,அரசியல்வாதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.