தமிழ்நாட்டிற்கு படகு மூலம் சென்ற குடும்பஸ்தர் கைது
13 Nov,2025
தமிழ்நாட்டிற்கு (Tamil Nadu) சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு சென்ற குடும்பஸ்தரே இன்று (13.11.2025) வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதன்போது, அவர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியது தெரியவந்தது.
அவரை கைது செய்த மரைன் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த சூசை தாசன் (வயது-56) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் சென்றதன் காரணம் குறித்து மரைன் காவல்துறையினர் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.