புவிசார் அரசியலில் நாடுகள் தனித்து நிற்பதும், தமது இறைமை மற்றும் சுயாதிபத்தியத்தை பாதுகாத்துக் கொள்வதும் சவாலானதாகவே மாறி இருக்கிறது.
கனடா போன்ற நாடுகளின் நிலையே இவ்வாறான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இலங்கை போன்ற சிறிய நாடுகளின் நிலை எப்படியிருக்கும் என ஊகிப்பது கடினமல்ல.
அதிலும், அணிசேரா கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்ட நாடுகள் மத்தியில் இது ஒரு சிக்கலான சூழலாகும்.
இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுகின்ற ஒரு நாடாக இருந்தாலும், வெளிப்படையாக அதைக் கூறுகின்ற அளவிற்கு கொள்கை ரீதியாக அதன் செயற்பாடுகள் இருப்பதில்லை.
அமெரிக்க – சீன முரண்பாட்டிலும் சரி, அமெரிக்க – ரஷ்ய முரண்பாட்டிலும் சரி, இந்திய – பாகிஸ்தான் மோதலிலும் சரி, ரஷ்ய – உக்ரேன் மோதல்களிலும் சரி, இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்களிலும் சரி, இலங்கை நடுநிலைப் போக்கில் தான் செயற்பட்டது என்று கூற முடியாது.
அண்மையில் இஸ்ரேல் குறித்து பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க அளித்த பதில் முக்கியமானது.
பலஸ்தீனர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம், அதேவேளை, இஸ்ரேலுடன் தந்திரோபாய ரீதியான உறவை பேணுகிறோம் என அவர் கூறியிருந்தார்.
பலஸ்தீனர்களுக்கு ஆதரவு, இஸ்ரேலுடன் உறவு என்பதே இதன் சுருக்கம்.
இதேபோன்ற ஒரு கருத்து, இந்திய –-சீன முரண்பாடுகளின் போதும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னர் வெளிப்படுத்தப்பட்டது.
இந்தியாவை நெருங்கிய உறவினர் என்றும் சீனாவை நெருங்கிய நண்பர் என்றும் முன்னைய ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் இத்தருணத்தில் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை.
இங்கு உறவுக்காரருக்கும், நண்பருக்கும் என்ன வித்தியாசம்? அது எந்த அளவுகோலால் தீர்மானிக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.
அதுபோலத்தான் பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வழங்குவதாக கூறிக் கொண்டு, இஸ்ரேலுடன் பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ளுகின்ற மூலோபாயத்தை இலங்கை கையாளுகிறது.
இது ஒரே நேரத்தில், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருக்கின்ற நிலை.
சர்வதேச ரீதியாக இலங்கை முக்கியமான அமைவிடத்தில் இருக்கின்ற சூழலில், இவ்வாறான ஒரு மூலோபாயத்தை கடைப்பிடிப்பது முக்கியமானதென ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.
இலங்கையின் மீது பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அமெரிக்கா, இந்தியா, சீனா என ஒவ்வொரு நாட்டின் தலையீட்டுக்கும் ஒவ்வொரு விளக்கங்களை கொடுக்க முடியும்.
இலங்கையின் மீதான இந்தியாவின் ஈர்ப்பும் ஆதிக்கமும் எப்போதும் மாறாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆனால், அது அண்மைக்காலத்தில் கொள்கை ரீதியான பெரும் மாற்றத்தை சந்தித்திருக்கிறது.
நீண்ட காலமாக இலங்கை விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்தி வந்த இந்தியா, தமிழர் பிரச்சினை விடயத்தை, தனது பிரச்சினை போலவே கையாண்டது.
ஒரு கட்டத்தில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறிக் கொண்டு, இலங்கை அரசுடன் தானே ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டது.
அதில், தமிழர்கள் தரப்பில் யாரும் கையெழுத்திடவில்லை.
தமிழர்களை ஒரு பங்காளியாக இணைக்க இந்தியா விரும்பவில்லை என்றும், அவர்களை ஒரு தனித்தரப்பாக அங்கீகரிக்காமல் தவிர்க்கவே அவ்வாறு நடந்து கொண்டது என்ற விமர்சனங்களும் உள்ளன.
ஜே.ஆரும் ராஜீவ்காந்தியும் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்டவை தான், 13 ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும்.
இன்று இந்த இரண்டும் நடைமுறை ரீதியாக செயலிழந்து போயிருக்கின்றன.
இது நீர்த்துப்போன நிலையை அடைந்திருப்பதற்கு தமிழர் தரப்புத்தான் காரணம் என்று குற்றம்சாட்டுபவர்களும் உள்ளனர்.
தமிழர் பிரச்சினை விடயத்தில் இந்தியா கவனம் செலுத்திய போது, தீர்வுகளை முன்வைத்து செயற்படுத்த முனைந்த போது, அதற்கு தமிழ்த்தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், அவர்கள் அதனை எதிர்த்ததே இந்தியாவின் விலகலுக்கு காரணம் என்றும் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
இந்த குற்றச்சாட்டு முற்றிலும் சரியானதா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.
இந்தியா தனக்கு உகந்த தீர்வையே தமிழர்களுக்கு வழங்க முற்பட்டது, அதுதான் உண்மை.
அதுதான், அதனை தமிழர்தரப்பு எதிர்க்கின்ற சூழலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது.
இந்த விடயத்தில் தமிழர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை.
ஏனென்றால், இந்தியா தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தலையீடு செய்ததே தவிர, தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டிருக்கவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை அது தீர்த்து வைக்க முயன்றாலும், தனது சொந்த நலன்களின் மீதான கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அதனை அணுக முற்பட்டது.
இதுதான், ஆரம்ப கட்டத்திலேயே இந்தியாவின் அமைதி முயற்சிகள் தோல்வியை நோக்கி அல்லது சறுகலை நோக்கி செல்வதற்கு காரணம்.
ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்துடன் தமிழர்கள் சார்பாக, இந்தியாவே உடன்பாடு செய்து கொண்டது, அந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக போர் நடத்தவும் தீர்மானித்தது.
அந்தப் போரின் போது தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் எல்லாமே, இந்தியா தமிழர்கள் சார்பில் செயற்படவில்லை என்ற எண்ணப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
அதேவேளை, இந்த விவகாரத்தில், இந்தியா தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்பதும் மறுப்பதற்கு இல்லை.
இந்திய பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவில் எங்கே பிரச்சினை ஏற்பட்டாலும், அமைதி ஏற்பட்டாலும்,அதன் விளைவுகள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இங்கு போர் தீவிரமடைந்த ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழர்கள் இந்தியாவிற்கே அகதிகளாகப் படையெடுத்து சென்றார்கள்.
பொருளாதார நெருக்கடியின் போதும் அவ்வாறே இந்தியாவைத் தான் பலர் நாடி ஓடினார்கள்.
இப்படி இலங்கையில் நடக்கும் எத்தகைய ஒரு செயலும், இந்தியாவின் மீது தாக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. அதனால் இந்தியா கொழும்பின் மீது தனது ஆளுகையைச் செலுத்த, இந்த விவகாரத்தை தன் கைக்குள் வைத்துக் கொண்டது.
அதற்காக கைச்சாத்திடப்பட்டது தான், இந்திய – -இலங்கை ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் இப்போதும், நடைமுறையில் இருக்கிறது, ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், போருக்கு அடிப்படையான முக்கியமான பல காரணங்கள் இப்போது இல்லாமல் போயிருக்கும்.
அதேவேளை, தமிழர்களை வைத்து கொழும்பை கையாளுவதற்கு இந்தியா பயன்படுத்திக் கொண்ட சூழல், இப்போது மாறியிருக்கிறது.
ஜே.ஆர்.காலத்திலேயே அந்த மாற்றம் நிகழத் தொடங்கி விட்டது.
புதுடில்லியை தமது பக்கம் வைத்துக் கொள்வதன் ஊடாக, தமிழர் தரப்பை பலமற்றவர்களாக மாற்றுகின்ற கொழும்பு இராஜதந்திரத்தின் ஒரு பகுதி தான் இந்திய- –இலங்கை ஒப்பந்தம்.
ஜே.ஆர்.ஜயவர்தன இந்திய- –இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக இந்திய படைகளை வரவழைத்து, வடக்கு கிழக்கில் நிறுத்தி விட்டு தனது படைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டார்.அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ரணசிங்க பிரேமதாச, இந்தியாவுடனான உறவுகளைச் சரியாக கையாளவில்லை.
அதற்குப் பின்னரான சூழலில் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக் ஷ போன்றவர்கள் இந்தியாவை தந்திரமாக கையாண்டனர்.
அவர்கள் இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், தமிழர் தரப்பிடம் இருந்து இந்தியாவை அந்நியப்படுத்த தொடங்கினர்.
கோட்டாபய ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக் ஷ,மிலிந்த மொறகொட ஆகியோர் இந்த விடயத்தை இன்னும் செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக இருந்தனர்.
மிலிந்த மொறகொடவே தெளிவான வழிவரைபடத்தை உருவாக்கினார். அதற்கான எழுத்து வடிவங்களையும் கொடுத்தார்.
இதன் மூலமாக அவர்கள் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருந்து வந்த நெருக்கத்தில் ஒரு தடையை ஏற்படுத்தினார்கள்.
அந்தத் தடை இப்பொழுது மிகப்பெரிய இடைவெளியாக மாறியிருக்கிறது. இரு தரப்பையும் விலக்கி வைத்திருக்கிறது.
இதனைத் தாண்டியே அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகர வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் கொழும்பு ஆட்சியாளர்கள் நன்கு திட்டமிட்டு இந்தியாவிற்கு எது தேவையோ அதனை செய்து கொடுக்கிறார்கள்.
அவ்வாறுதான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் வளங்களையும் இந்தியாவிற்கு கொடுப்பதன் மூலம், அவர்கள் தமிழர்களை புதுடில்லி நெருங்கி விடாத சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த இடைவெளியைக் கடக்காமல், இந்தச் சூழலை தாண்டி செல்லாமல் இந்தியாவை நெருங்குவதோ, இந்தியாவின் அரவணைப்புக்குள் தமிழர்கள் செல்வதோ அவ்வளவு இலகுவானதல்ல.