மன்னார் கள்ளியடி பகுதியில் கோர விபத்து ; பலர் படுகாயம்
03 May,2025
மன்னார்- யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் சனிக்கிழமை (03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்தாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வேக கட்டுப்பாட்டை இழந்து அதி வேகமாக சென்ற கன ரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பேருந்துடனும் மோட்டார் சைக்கிளிலுடனும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபரும் காயமடைந்ததுடன், அவரது மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் கன ரக வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.