உயர் பாதுகாப்பு வலய காணி விடுப்பு: அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
25 Apr,2025
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilake) தெரிவித்துள்ளார்.
யாழ். (Jaffna) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கு மீள்குடியேற்றம் உட்பட ஏனைய திட்டங்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பாடுகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கூடிய நிதி ஒதுக்கீடு செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் உரிய திட்டங்களுக்கு செலவு செய்து முன்னேற்ற அறிக்கைகளை அனுப்பிவைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கலந்துரையாடலில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.