விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ள வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்
டெய்லிமிரருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
கேள்வி- யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையை நாங்கள் கருத்தில் கொள்வோம்இயுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்தோம் எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது.
தற்போது சிறிய ரக ஆயுதங்களை பலர் பயன்படுத்துவது போல உள்ளது?
பதில்: யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என நினைத்தோம், ஆனால் எனது பதில் இல்லை என்பதே.
யுத்தம் ஏன் இடம்பெற்றது என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கான அடிப்படை காரணங்களை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
வடக்குகிழக்கில் சில பிரச்சினைகள் உள்ளன, அவை அனைத்து அரசியல் விவகாரங்கள். ஆனால் அவற்றிற்கான பதில் இராணுவரீதியானது.
ஆனால் பிரச்சினை இன்னமும் நீடிக்கின்றது அதற்கு தீர்வை காணவேண்டும்.
சுமார் 30,000 பயங்கரவாதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் பலர் கொல்லப்பட்டனர், பலர் சரணடைந்தனர் ஆனால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது?
அவர்களிடம் ஆர்பிஜிக்கள் இருந்தன, விமானங்களை நோக்கி ஏவுகணைகளை அவர்கள் ஏவியுள்ளனர்.
அவர்களிடம் 30,000 சிறிய ஆயுதங்கள் இருந்தன.
LTTE-arms.jpg
இரண்டு குழுக்கள் இருந்தன, கருணா குழுவிடம் கூட ஆயுதங்கள் இருந்தது.
ஆனால் இந்த ஆயுதங்களை அவர்கள் ஒப்படைக்கவில்லை. அந்த ஆயுதங்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் எந்த அமைப்பும் அந்த ஆயுதங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை எண்ணும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன? எத்தனை ஆயுதங்களை ஒப்படைத்தனர்? என்ற விபரங்கள் இல்லை.
இது குறித்து எந்த ஆராய்ச்சியும் இல்லை! இவ்வாறான ஆராய்ச்சிகளில் நாங்கள் பலவீனமானவர்களாக உள்ளோம்.
இதன் காரணமாக இந்த ஆயுதங்கள் எங்கும் உள்ளன, எல்லா இடங்களிலும் இவற்றை பயன்படுத்துகின்றனர்.
கொலை செய்வதற்கு ரி56 ரக துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர், பிஸ்டல்களும் உள்ளன. இந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்கு எந்த உரிய திட்டங்களையும் அரசாங்கங்கள் முன்னெடுக்கவில்லை.
ஆகவே இங்கு பாக்கிஸ்தானின் பெசாவர், ஆப்கானிஸ்தான் போன்ற நிலை காணப்படுகின்றது.
அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் என்றால் பிரச்சினையில்லை, ஆனால் அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவ்வாறான ஒன்று இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
எங்கள் தேசியபுலனாய்வு பிரிவுகள் பலவீனமானவையாக உள்ளன.
அமெரிக்கா, நியுசிலாந்தில் அல்லது மத்திய கிழக்கில் சம்பவம் ஒன்று இடம்பெற்றால் அதனால் எங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா என நாங்கள் ஆராயவேண்டும்.
நியுசிலாந்து தேவாலய தாக்குதல் குறித்து எங்கள் புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்திருக்கவேண்டும்.
கேள்வி - தற்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பயங்கரவாதிகள் உடையவை, இராணுவத்தினருடையவை இல்லை என நீங்கள் எவ்வளவு உறுதியாக தெரிவிக்கின்றீர்கள்?
பதில்- இராணுவத்தினரிடமிருந்து சில ஆயுதங்களை கொண்டு சென்றனர். ஆனால் அது குறித்து என்னிடம் போதிய விபரங்கள் இல்லை.
விடுதலைப்புலிகள் இந்த ஆயுதங்களை பயன்படுத்தப்போவதில்லை இது உறுதியான விடயம்.
இலங்கை ஒரு சிறிய நாடு எவராலும் தெற்கு வடக்கு கிழக்கிற்கு இடையில் 8 மணித்தியாலங்களிற்குள் பயணம் செய்ய முடியும். விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களிற்கு கரங்களை சென்றடைந்துள்ளன.
இவை அனைத்தையும் பணத்திற்காக செய்துள்ளனர்.
கேள்வி- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எங்கள் தேசிய பாதுகாப்பின் மீது விழுந்த பெரிய அடியாகும்.ஆனால் இந்த தாக்குதலிற்கு முன்னர் எங்களிற்கு இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல்களும் அறிக்கைகளும் கிடைத்துள்ளன. எவரும் இதனை கருத்திலெடுத்து செயற்படவில்லை. அரச புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் குறித்த உங்களின் அவதானிப்புகள் என்ன?
பதில் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளி அந்தவேளை ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யாரும் இல்லை.
ஏனென்றால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதால் அவர் முப்படைகளின் தளபதியாக பதவிவகித்தார், பாதுகாப்பு அமைச்சர் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சர் தேசிய பாதுகாப்பு பேரவையின் தலைவர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்தார்.
அரசமைப்பின்படி அவரே நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பு.
இதன் காரணமாக எனக்கு தெரியாது என தெரிவித்துவிட்டு அவரால் தப்ப முடியாது.
ஜனாதிபதி அடிப்படை உரிமைகளை மீறும்போது அவருக்கு ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமை இல்லாமல் போய்விடும்.
அவர் என்ன செய்திருக்கின்றார் என்றால் கொல்லப்பட்ட அந்தமக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு அவர் குற்றவாளி என தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் நஸ்ட ஈட்டை மாத்திரம் வழங்க உத்தரவிட்டது.
ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக காணப்படவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை அவர் சிங்கப்பூரிலிருந்தார், 22 மில்லியன் மக்களின் உயிருக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர் உடனடியாக நாடு திரும்பவில்லை.
விமானப்பயணங்களை தாமதமாக்கிவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். இது அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.