நூற்றுக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியுடன் சங்கமமான மாலினி பொன்சேக்கா
26 May,2025
'இலங்கை சிங்கள சினிமாவின் அரசி ' என்று வர்ணிக்கப்படும் பிரபல நடிகை மாலினி பொன்சேகா தனது 78ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் காலமானார். மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்றன.
முழுமையான அரச ஆதரவுடன் பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் நூற்றுக்கான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவரது பூதவுடல் திங்கட்கிழமை (26) காலை தரங்கனி மலர் சாலையிலிருந்து, அரச மரியாதையுடன் சுதந்திர சதுக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. மறைந்த அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மக்கள் அஞ்சலியின் பின்னர் சுமார் 4 மணியளவில் இறுதி கிரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. மத வழிபாடுகளுடன், பிரதமர் உட்பட பல முக்கியஸ்தர்களின் சிறப்பு குறிப்புக்களும் இடம்பெற்றன.
1947ஆம் ஆண்டு பிறந்த அவர் சுமார் நான்கு தசாப்தங்கள் சிங்கள சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள மாலினி பொன்சேக்கா 1978இல் பைலட் பிரேம்நாத் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கனேசனுடன் நடித்திருக்கின்றார். இவர் சிறந்த நடிகைக்கான சரசவிய விருது மற்றும் மிகவும் பிரபலமான நடிகைக்கான சரசவிய விருது என பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்திருக்கின்றார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையிலேயே அவர் தனது 78ஆவது வயதில் உயிர் நீத்தார். இறுதி கிரிகைகளின் பின்னர் நூற்றுக்கணக்கான ரசிகர்களிள் கண்ணீருக்கு மத்தியில் மாலினி பொன்சேக்கா அக்கினியுடன் சங்கமமானார்.