தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே புதிய கப்பல் சேவை ஆரம்பம்
16 Dec,2024
தலைமன்னார் - ராமேஸ்வரம் வரையான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட நிலையில், இந்த புதிய கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை 1914ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னர் ஏற்பட்ட காலநிலை சீர்கேடு மற்றும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் போன்றவற்றின் காரணமாகக் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.