இஸ்ரேலில் இருந்துநாடு கடத்தப்பட்ட பெண் - பலரை நாடு கடத்த நடவடிக்கை
15 Dec,2024
இஸ்ரேலில் இருந்து 17 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேலை ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.
விவசாயத் துறைக்கான வேலை வீசாவில் இஸ்ரேலுக்கு சென்றவர்கள அந்தப் பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று பேக்கரிகளில் பணிபுரியும் போது உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்(Israel), வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் நாடு எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டுப் பணியாளர்கள் இஸ்ரேலில் பணிக்கு வந்த பின்னர் அவர்களது வீசா வகையை வேறு வீசா வகைக்கு மாற்றுவதற்கான சட்டம் இல்லையென இஸ்ரேல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, தாதியர் பணிக்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்ற இலங்கைப் பெண் ஒருவரும் சேவை நிபந்தனைகளை மீறியதன் காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக திருட்டு குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையர் ஒருவரை நாடு கடத்த அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.