வங்கி கணக்கிற்குள் ஊடுருவி பாரிய பணமோசடி சிக்கிய சந்தேகநபர்
09 Dec,2024
நுகேகொட பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கை ஊடுருவி, அந்தக் கணக்கிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (9) உத்தரவிட்டுள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய விசாரணை அதிகாரிகள், மேற்படி முறைப்பாட்டாளர் காணி விற்பனைக்காக இணையத்தில் விளம்பரம் செய்ததாகவும், அதனைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களை சந்தேக நபர் பெற்றுக்கொண்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் கணக்கு இலக்கங்களை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் கணனி தரவு அமைப்பு மூலம் முறைப்பாட்டாளரின் வங்கி கணக்கிற்குள் நுழைந்து அதில் இருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, சந்தேகநபர் தனக்கு நெருக்கமான மற்றுமொரு குழுவினருடன் இணைந்து இந்த மோசடிச் செயலைச் செய்துள்ளதாகவும், மோசடியாகப் பெறப்பட்ட பணம் சந்தேகநபரின் ஐந்து வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.