இலங்கை அதிபர் தேர்தல் முடிவு : நாட்டை விட்டு தப்பி ஓடிய ராஜபக்ச குடும்பம்?
23 Sep,2024
இலங்கை அதிபர் தேர்தலில் நமல் ராஜபக்ச வெறும் 2 சதவீத வாக்குகளைப் பெற்று படுதோல்வி அடைந்த நிலையில், அவரது மனைவி நாட்டை விட்டு தப்பியோடினார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுர குமார திசநாயக்க வெற்றிபெற்றுள்ளார். இவர் தேர்தல் பரப்புரையின் போது ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், அவர் தேர்தலில் பெற்றதால் எதிர்க்கட்சியினர் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். அதன்படி இந்தத் தேர்தலில் வெறும் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று நமல் ராஜபக்ச படுதோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து , நமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வினோஜா மற்றும் அவரது தந்தை ஆகியோர் விமானம் மூலம் துபாய்க்குத் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோன்று டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி, தொண்டமான் குடும்பத்தினர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அங்கு பெரிய அளவில் மக்கள் எழுச்சி நடந்து அது மிகப்பெரிய புரட்சியாக வெடித்தது. அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம், இலங்கையை விட்டு தப்பியோடினர். தற்போது இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் ராஜபக்சே குடும்பம் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், நமல் ராஜபக்சவின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் தப்பியிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.