கல்முனை பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பை தடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்
02 Jun,2024
கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதால் அதனை தடுப்பதற்கு கடந்த வாரம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் செயலாளரும் கரையோரப் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகமுமான ரணவக்க ஆகியோரை சந்தித்து உடனடியாக தடுப்பு அணைகளை நிர்மாணிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து இந்த செயற்றிட்டத்தின் முதற்கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலரிப்புக்கு தீர்வாக, முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை கடற்கரை பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, உதவி ஆணையாளர் ஏ.சி.எம்.அசீம், பொறியியலாளர் அப்துல் ஹலீம் ஜெளஸி அப்துல் ஜப்பார், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.சி.எம். சத்தார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், கரையோர மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
கல்முனை பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்கு துரிதமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸுக்கு கல்முனை மக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் இதன்போது தெரிவித்தனர்.
அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பை தடுப்பதற்காக தடுப்பணைகள் இடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.