பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேர் கைது!
01 Jun,2024
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 13 ,கொழும்பு 12 மற்றும் கொழும்பு 8 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25, 45 மற்றும் 43 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெலிகமை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 43, 30 மற்றும் 40 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பொரல்லஸ்கமுவ , களனி மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 52, 39 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கிங்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,317 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.