கொழும்பிற்கு கப்பல்களை அனுமதியோம் - அரசின் வரிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
31 Jan,2023
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
துறைமுக நுழைவாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு துறைமுகத்தின் பல தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதிய வரிக் கொள்கையால் தாம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள போராட்டக்காரர்கள், வரிகளை நீக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் பதிலின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை குறித்து பரிசீலிப்பதாக வர்த்தகம், கைத்தொழில் மற்றும் சேவைகள் தொடர்பான முற்போக்கு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷியாமல் சுமனரத்ன தெரிவித்தார்.
அரச சொத்துகளை சர்வதேச சக்திகளுக்கு விற்க அரசாங்கம் முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அத்துடன் அரசாங்கம் முன்வைத்துள்ள வரிகளை திருத்தியமைக்காவிட்டால் நாளை முதல் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஒன்றியத்தின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.