பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள சீனாவின் உதவி அவசியமானதாக காணப்படுகின்ற நிலையில், அது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை, வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை, மறுசீரமைப்பது அவசியமாகின்றது.
இதன்படி, கடன் பெற்றுக்கொண்டுள்ள நாடுகளிடம், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், கடன் மறுசீரமைப்புக்கு சீனா, பல்வேறு நிபந்தனைகளை விடுத்து வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ள கடனை, மறுசீரமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்து, பேசுபொருளாக மாறியது.
கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவி வழங்காத பட்சத்தில், சீனாவிற்கு எதிராக 'சீனா கோ ஹோம்' போராட்டத்தை ஆரம்பிக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் எச்சரிக்கை விடுத்தார்.
மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா, எமது மக்களின் நண்பன் கிடையாது எனவும், சீனா ராஜபக்ஷ குடும்பத்தின் நண்பன் எனவும் அவர் தெரிவித்தார்.
சீனா, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு துறைமுக நகரத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை.
சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாக செயற்பட வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது. இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்கு சார்பாக செயற்படுகிறது என குறிப்பிடுகிறார்கள்.
சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மத சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள். சீனா, இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவினதும், அவரது குடும்பத்தினரது நண்பராகவே சீனா உள்ளது," என இரா.சாணக்கியன் தெரிவிக்கின்றார்.
கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஆதரவு வழங்க தவறும் பட்சத்தில், சீனாவிற்கு எதிராக ''கோ ஹோம் சைனா" போராட்டத்தை ஆரம்பிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கடன் மறுசீரமைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊழியர்மட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
20 ரில்லியன் டாலர் வெளிநாட்டு கையிப்பை சீனா கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் சீனா முன்னிலையில் உள்ளது. 7.4 பில்லியன் டாலர் இலங்கை சீனாவிற்கு கடனாக வழங்க வேண்டும். 22 மில்லியன் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் அவர் அவர் குறிப்பிடுகின்றார்.
"பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்ந்து கடன் வழங்கி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியள்ளது. நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டா கோ கம போராட்டத்தை ஆரம்பிப்பதை போன்று கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும். அதற்கு நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என்பதை சீன அரசாங்கத்திற்கும், இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்," என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பதில்
சீனா குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் புரிந்துணர்வு தவறு எனவும், முழுமையற்றது எனவும் கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு, சீன தூதரகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட இலங்கை நாட்டிற்கு சீனா, மிகப் பெரிய உதவிகளை செய்துள்ளது. கோவிட்-19 மற்றும் வாழ்வாதார நிவாரணத்திற்கு எதிராக சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி ஆரம்பமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் முதலில் சீனாவே, இலங்கைக்கு உதவிகளை வழங்கியது என சீன தூதரகம் கூறியுள்ளது.
சீன நிதி நிறுவனம், இலங்கை நிதி அமைச்சுடன் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் சீன தூதரகத்தின் டுவிட்டர் பதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், இலங்கைக்கு வருகைத் தந்து, இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாகவும் அந்த பதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரராக, இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு ஏனைய நாடுகளுக்கு தாம் உற்சாகத்தை வழங்கி வருவதாகவும், இலங்கைக்கு கடன் வழங்கியோருடனான அனைத்து கலந்துரையாடல்களிலும் சீனா பங்குப்பற்றியுள்ளதாகவும், சீனா இலங்கைக்கு பாரியளவு கடன் வழங்கிய நாடு கிடையாது எனவும் அந்த பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.