இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. பல அரசியல்வாதிகள் வீடுகள் தீக்கிரையாயின.
முதலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். அவர் எங்கே இருக்கிறார் என்பதும் மர்மமாக நீடித்தது. அதன் பிறகு நீடித்த போராட்டத்தில் ஒரு கட்டத்தில் மக்கள் ஜனாதிபதி மாளிகை, செயலகம் போன்றவற்றில் பெருமளவில் நுழைந்து அவற்றைக் கைப்பற்றினர். இந்நிலையில், ஜனாதிபதியாக இருந்த, கோட்டாபய ராஜபக்ஷவும் நடு இரவில் நாட்டைவிட்டு வெளியேறி, பிறகு பதவியில் இருந்தும் விலகினார்.
இந்த நிகழ்வுகளால் முதலில் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, பிறகு ஜனாதிபதியாகவும் தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நாட்டில் இயல்புநிலை திரும்பியதை அடுத்து, வெளிநாட்டில் இருந்து கோட்டாபய நாடு திரும்பினார். மஹிந்தவும் வெளியில் வந்தார்.
பதற்றம் தணிந்திருப்பதை அடுத்து, தற்போது ராஜபக்ஷ குடும்பத்தினர் படிப்படியாக அரசியல் நடவடிக்கைகளுக்குள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தவிர, ஏனையோர் படிப்படியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய, மாலத்தீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிறிது காலம் தஞ்சமடைந்திருந்தார்.
பின்னர் நாடு திரும்பியிருக்கும் அவர் அவர் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பிலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளார்.
இதே வேளை, பசில் ராஜபக்ஷ நீதிமன்ற அனுமதி பெற்று, அமெரிக்கா பயணித்துள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது அரசியல் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துள்ளது.
பொதுக்கூட்டங்களை நடத்துதல், முக்கிய பிரமுகர்களை சந்தித்தல், நிகழ்வுகளை நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் மஹிந்த தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி, இதற்கு முன்னர் காணப்பட்ட அளவில் செல்வாக்கை மீட்டெடுக்க முடியுமா என்பது ராஜபக்ஷ குடும்பத்திற்கு கேள்வியாக இருந்த போதிலும், அவர்களது அரசியல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் ஆசனத்தில் அமர வைப்பதற்கான நடவடிக்கைகளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இது தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவரை, பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.
''கடும் பிரச்னைக்கு மத்தியில் பதவி விலகிய மஹிந்த அதே பதவியிலிருந்து கௌரவமாக விலக வேண்டும் என்பதே கட்சியிலுள்ள பலரது கருத்தாக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதான் யோசிக்கின்றார்கள்" என அவர் கூறினார்.
எனினும், கட்சிக்குள் தற்போது பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த மீண்டும் பிரதமராவது சாத்தியமா?
எதிர்வரும் 18ம் தேதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல் மற்றும் அதன் சாத்தியம் குறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சிவராஜாவிடம் பிபிசி தமிழ் வினவியது.
கேள்வி :- மஹிந்த மீண்டும் பிரதமராகும் சாத்தியம் உண்டா?
பதில் :- "இப்போதைக்கு பிரதமராவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்கள் அதற்கு முயற்சி எடுக்கிறார்கள். ஆனாலும், அது சாத்தியம் இல்லை. பொதுஜன பெரமுன நடத்திய கூட்டங்களில் எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன. இப்படி எதிர்ப்புகள் வந்தால், இப்போது இருக்கின்ற நிலைமையும் குறைவடைந்து விடும் என ஜனாதிபதி தரப்பினர் பயப்படுகின்றார்கள். அதனால், உடனடியாக பிரதமர் பதவியில் மாற்றங்கள் செய்தவற்கு உடன்பாடு இல்லை.''
கேள்வி :- அப்படியாயின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த கட்டமாக என்ன செய்யும்?
பதில் :- ''ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு போகலாமா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார். அப்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு போனால், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யோசிக்கிறது. அப்படி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஒரு தவணை அவருக்கு கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் தவணையை பயன்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருகிறது,'' என்கிறார் அவர்.