பதில் ஜனாதிபதியாக ரணில்! - அறிவித்தார் சபாநாயகர்! நாடாளுமன்றமும் சுற்றிவளைக்கப்படுகிறது?
14 Jul,2022
அரசியலமைப்பிற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமையால் அரசியலமைப்பிற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 37 (1) சரத்திற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தினை இன்றைய தினத்திற்குள் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே அவரது பதவி விலகல் தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. அனைவரையும் அமைதியைக் கடைபிடிக்குமாறு கோருகின்றேன் என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற போராட்டகாரர்கள் முயற்சி செய்வதாக தெரிவித்துள்ள பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாரம்பரிய அரசியல் தரப்பினர் போராட்டகாரர்களுடன் கைகோர்த்துள்ளமை கவலைக்குரியது என குறிப்பிட்டார்.
விசேட காணொளியொன்றை வெளியிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
போராட்டகாரர்கள் முப்படைகளின் தலைமையகத்தையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட திட்டமிட்டதை தடுக்கும் வகையிலும்,பொது அமைதியை பேணும் நோக்கத்திலும் அவரசகால சட்டமும் ,ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் பிரதமர் செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் பிற்பகல் அளவில் போராட்டக்காரர்கள் பிரதமரின் செயலகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தன