கொழும்பை விட்டு தப்பியோடிய கோட்டாபய - ரணில்
09 Jul,2022
நேற்று இரவு முதல் கொழும்பிற்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் மக்கள் அதிக வாழும் தோட்டங்கள், குடிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் பலத்த இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மக்கள் தங்கியுள்ள இடங்களிலிருந்து பிரதான வீதியை அடைய முடியாத நிலைமை நேற்றிரவு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக விசேட பிரபுகளின் வீடுகளுக்கு இராணுவம மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் வீடுகளில் எவரும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகளை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், சிலர் தங்களுடைய இருப்பிடத்தை அறிவிக்கவில்லை எனவும், சிலர் தொலைபேசிகளை துண்டித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறியதுடன், கொழும்பு 7இல் உள்ள தனது இல்லத்தில் இருந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.