கைதிகள் விவகாரத்தில் ஐ.நா தலையிட இடமளியோம்!
12 Feb,2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அல்லது ஏனைய சர்வதேச சக்திகள் கைதிகள் தொடர்பான தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டில் கைதிகளை விடுவிக்கும் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு பிரச்சினை ஏற்படாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அரச தலைவர் தனது கொள்கை அறிக்கையில் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள நீண்டகாலக் கைதிகளை விடுவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கைதிகளை சுதந்திரமாக அவதானித்து அரச தலைவர் மன்னிப்பு வழங்குவார்” என்றார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமையிட்டு பல நாடுகள் சிறிலங்காவை எதிர்ப்பதாகவும், அவர்கள் அரசுக்கு எதிராக எப்போதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.