நாளையதினம் வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி! பொலிஸ் திணைக்களம்
13 May,2021
நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய விற்பனை நிலையங்கள் ஊடாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
உணவகங்களில் இருந்து (தொலைபேசி வாயிலாக கிடைக்கும் கட்டளைக்கு ஏற்ப) வீடுகளுக்கு உணவு விநியோகிக்க முடியும். இதனை தமது ஊழியர்களை மாத்திரம் கொண்டு மேற்கொள்ளமுடியும். எனினும், அப்பகுதியிலுள்ள பொலிஸ்நிலையத்துக்கு முன்னறிவித்தல் மேற்கொண்டு, தாம் உணவு விநியோகிக்கும் வாகனம் தொடர்பிலும் அறிவிக்க வேண்டும்.
இதேவேளை, மெனிங் சந்தை, பேலியகொடை மீன் சந்தை உள்ளிட்ட அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் எனினும், இந்த கட்டுப்பாட்டு காலப்பகுதியில் மொத்த வணிகங்களை மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்றும் சில்லறை வணிகத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.