இலங்கையில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்கள் உருமாறிய புதிய வகை வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது முன்னர் காணப்பட்ட வைரஸிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையுடையது என்பதோடு, கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமாகும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.
கொவிட் பரவல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இந்தியாவில் சிறந்த நிலைமை காணப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 11 000 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர். அந்நாட்டு சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவான எண்ணிக்கையாகும். எனினும் கிரிக்கட் விளையாட்டு போட்டி , தேர்தல் பிரசாரங்கள் என்பவற்றால் அங்கு மீண்டும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல இலங்கையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் துரதிஷ்டவசமாக உருமாறிய புதிய வைரசுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த புதிய வைரஸ் முன்னர் காணப்பட்ட வைரஸின் தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
முன்னர் காணப்பட்ட வைரஸ் ஒருவரிடமிருந்து ஏனைய ஒருவர் அல்லது இருவருக்கு மாத்திரமே பரவக் கூடியதாக காணப்பட்டது. ஆனால் தற்போதுள்ள வைரஸ் ஒருவரிடமிருந்து 5 - 6 பேருக்கு பரவக் கூடியதாகும். அத்தோடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 90 சதவீதமானோருக்கு 14 நாட்களுக்கு எவ்வித தொற்று அறிகுறிகளும் தென்படாது.
மேலும் தற்போது இளைஞர்களும் அதிகளவாக தொற்றுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவில் கணிசமானளவு இளைஞர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பாராயின் அவர் இருக்குமிடத்தில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வைரஸ் உயிருடன் இருக்கும்.
எனவே தொற்றுக்கு உள்ளானவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியேறினாலும் அவரிடமுள்ள வைரஸ் அங்கு காணப்படும். இதனால் ஏனையோரும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே சரியான முறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குருநாகலில் 251 பேருக்கும் கம்பஹாவில் 236 பேருக்கும் கொழும்பில் 194 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
களுத்துறையில் 48 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 38 பேருக்கும் காலியில் 36 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் 28 பேரும் மாத்தறையில் 26 பேரும் அநுராதபுரத்தில் 23 பேரும் மாத்தளையில் 21 பேரும் வவுனியாவில் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டியில் 11 பேருக்கும் மொனராகலையில் 10 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 09 பேருக்கும் திருகோணமலையில் 08 பேருக்கும் புத்தளத்தில் 07 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவசர தேவைகளின்றி திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதை தவிருங்கள் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா ஜஹம்பத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் ஆபத்து உள்ளமை திருகோணமலையில் கண்டறியப்பட்டதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்டங்களின் நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களின் உள்நுழைவைத் தடுக்குமாறும் அவர் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்