இலங்கையில் கைதாகிய முக்கிய நபர் -நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா
22 Mar,2021
இலங்கையில் அசாத்சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்க்ஸ் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக விசாரிக்க ஒரு அமெரிக்க வெளியுறவு செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 14ம் திகதி கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் கவனம் செலுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மாற்றம் மற்றும் ஜனாதிபதி ஜோ பைடனின் நியமனத்துடன் மனித உரிமைக் கொள்கைகளில் கடுமையான மாற்றம் நிகழ்ந்துள்ளது. டொனால்ட் டிரம்பின் கீழ் மனித உரிமைகள் தொடர்பாக எவ்வித அவதானமும் செலுத்தப்படாத நிலையில் ட்ரம்ப் சர்வதேச அரசியல், புற நாடுகள் தொடர்பாக அவதானத்தை செலுத்துவதை விட தனது சொந்த நாட்டின் பிரச்சினைகள் குறித்து மட்டும் அவதானத்தை செலுத்தியிருந்தார்.
எனினும் ஜோ பைடன் ஆட்சி ஆரம்பித்தவுடன் உலகம்முழுவதும் நடைபெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்தும் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு முன்னர் இருந்தாற்போல வழமையான நிலைக்குத் திரும்புகிறது.
இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில்,ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரின் கைதுகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது கூட அழுத்தம் கொடுக்கக்கூடும். இதுபோன்ற அழுத்தங்களை எதிர்கொண்டு சாலி விரைவில் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 08 மாதங்களுக்கும் மேலாக குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன் இறுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது. இதுவரையும் அசாத்சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.
மனித உரிமைகள் பேரவை முன்னிலையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பாக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆணைக்குழுவில் உறுப்புரிமை வகிக்கும் 11 முஸ்லிம் நாடுகள் உள்ளதுடன் அந்த நாடுகள் அனைத்தினதும் ஆதரவு அதற்கு கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது. இருப்பினும், ஏற்பட்டுள்ள நிலைமையை எதிர்கொண்டு, சில நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கலாம் (பிரேரணைக்கு ஆதரவாக) அல்லது விலகலாம். அப்படியானால், அது இலங்கைக்கு கடுமையான தோல்வியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.