பிள்ளையானுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றின் உத்தரவு!
28 Oct,2019
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உயர்நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புகள் வெளிவராத நிலையில் எதிர்வரும் தை மாதம் 08ஆம் 09ஆம் திகதிகளுக்கு வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.