அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் கோட்டாவின் பெயர் இல்லை!
                  
                     15 Aug,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை.
	2019ஆம் ஆண்டு மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பட்டியல் நேற்று (புதன்கிழமை) அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் அவர் அமெரிக்க குடியுரிமை கொண்டவராகவே கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
	தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும் ஏப்ரல் 17ஆம் திகதியிலிருந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார்.
	இதுதொடர்பான ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
	இந்தநிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிட்ட முதலாவது காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை.
	அதனைத் தொடர்ந்து இரண்டாவது காலாண்டுக்கான பட்டியலில், அவரது பெயர் இடம்பெறும் என்று கூறப்பட்டது.
	எனினும் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் இரண்டாவது காலாண்டுக்கான 17 பக்க பட்டியல் ஓகஸ்ட் 7ஆம் திகதி நாளிடப்பட்டு நேற்று வெளியிடப்பட்டிருந்தது அதிலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை.
	ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.