ரிசாட் எம்.பி.க்கு முன்னர் இருந்த அதே அமைச்சுப் பதவி: வழங்கினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை
12 Jul,2019
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஏற்கனவே வகித்த அமைச்சுப் பதவியையே ஏற்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளை ஏற்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாம் பதவிகளை இராஜினாமா செய்தது இனவாதம் பேசுவதற்காக அல்ல. எமது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக. நாம் ஒரு மாதத்துக்குள் இந்தப் பிரச்சினையை தீர்த்துத் தருமாறு கால அவகாசம் வழங்கினோம். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராகவே அதிக பிரச்சினைகள் காணப்பட்டன.
அவர் தவறு செய்யவில்லையென்பதை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அமைச்சரவையில் எமக்காக கருத்துத் தெரிவிக்க கருத்துப் பலம் இல்லாத காரணத்தால் நாம் அமைச்சுப் பதவியை ஏற்க தீர்மானம் எடுத்தோம்.
ஜனாதிபதியை சந்தித்த போதும், அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.நாம் இருந்த அமைச்சுப் பதவிகளுக்கே மீண்டும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளோம். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்பதாக கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
ரிசாட் பதியுதீனுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை: அத்துரலிய தேரர்
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்கினால், அவருக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட கட்சிகள் பலவற்றினதும் ஆதரவுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கப் போவதாகவும் தேரர் கூறியுள்ளார்.