திருமலையில் சீன முதலீட்டுடன் இரும்பு உருக்கு தொழிற்சாலை?
29 May,2019
திருகோணமலை கப்பற்றுறை பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றினை சீன முதலீட்டுடன் அமைப்பதற்கு 600 ஏக்கர் காணியினை வழங்க வேண்டும் என்று சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்கிரம விடுத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது திருகோணமலை கப்பற்றுறைப் பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலையை சீன முதலீட்டுடன் அமைப்பதற்கு 600 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும் என்ற அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் மலிக் சமரவிக்கிர சமர்ப்பித்தார். இதற்கு துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான 600 ஏக்கர் காணியை இதற்கு வழங்க முடியாது என்று அமைச்சர் வாதிட்டுள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இப்பகுதியில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் சூழல் மாசடையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் சான்றிதழைப் பெற்றே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனாலும் இதற்கான காணியை வழங்க அமைச்சர் சாகல ரட்நாயக்க மறுத்ததையடுத்து இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு காணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் இவ்விடயம் குறித்து இறுதித் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், உங்களது பிரச்சினைக்கு நீங்கள் அலரிமாளிக்கைக்குள் தீர்வைக் காண வேண்டும். அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.