வன்முறையை கட்டுப்படுத்த உச்சபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்!
13 May,2019
வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினையடுத்து பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சில குழுக்களை அடையாளம் கண்டுள்ளோம். இவ்வாறானவர்கள் நேற்றிரவு சிலாபத்தில் ஆரம்பித்த வன்முறைகளை பல்வேறு பகுதியில் அரங்கேற்றியுள்ளனர்.
இதன்போது படையினர் அப் பகுதியில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறானவர்களின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுடன், தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மேலும் வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சட்டத்தை கையில் எடுத்தால் கடுமையான நடவடிக்கை!
சட்டத்தை எவரும் கையில் எடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் சி.பி.விக்ரமரட்ண, அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே இன, மத மோதல்களை ஏற்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
யாராவது தொடர்ந்தும் குழப்பைத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு பிணை வழங்க முடியாத வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அது மாத்திரமன்றி தேவை ஏற்படின் 10 வருடங்கள் அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்
30 வருட யுத்தத்தை நிறைவு செய்த பொலிஸ் உள்ளிட்ட படையினாரால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பது ஒரு சிறிய விடயம்.
ஆகவே எவரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது, அவ்வாறு மீறி சட்டத்தை கையில் எடுத்தால் அவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.