மஹிந்தவிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை: கடத்தல் விவகாரம் தொடர்பில்
18 Aug,2018
த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை , சித்திரவதை செய்யப்பட்டமை,ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நொயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் நேற்று விஷேட விசாரணைகள் இடம்பெற்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிந்துள்ள தகவல்களை வெளிப்படுத்தும் நோக்கில், சுமார் இரண்டரை மணி நேரம் இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
கீத் நொயார் விவகாரத்தை விசாரணை
செய்யும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ். திசேராவின் வழி நடத்தலில் பிரதான விசாரணை அதிகாரிகளான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார உள்ளிட்ட ஐவர் கொண்ட சிறப்புக் குழு இந்த விசாரணைகளை முன்னெடுத்தது.
நேற்று முற்பகல் 11.35 மணி முதல் பிற்பகல் 1.55 மணி வரை இந்த விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கீத் நொயார் கடத்தப்பட்டது முதல் அவர் விடுவிக்கப்படும் வரையில் பரிமாற்றப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ள தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும், கீத் நொயாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பிலும், ஊடகங்களில் அரச அதிகாரிகளுக்கு எதிராக அப்போது பிரசுரமான சில விடயங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கேள்வி எழுப்பட்டுள்ளது.
விசாரணைக்கு முன் சென்ற அறிவித்தல்
நேற்று 17 ஆம் திகதி வெள்ளியன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு முதலில் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கையெழுத்துடன் இந்த அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அதன் பின்னர் இடம்பெற்ற சில நடவடிக்கைகளை அடுத்து நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் கொழும்பு 7 , விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து விசாரணை நடாத்த தீர்மானிக்கப்பட்டது.
மஹிந்தவின் வீட்டின் முன் கூடிய ஒன்றினைந்த எதிர்க்கட்சியினர்:
நேற்று முன்னாள் ஜனாதிபதியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்வதை அறிந்துகொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும், அவர்களது ஆதரவாளர்கள் பலரும் கொழும்பு 7 , விஜேராம வீதியில் உள்ள மஹிந்தவின் வீட்டின் முன்னாள் ஒன்று கூடினர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம் ஜயந்த , எஸ்.பி. திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்ரா வன்னி ஆரச்சி, சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, ரோஹித்த அபே குனவர்தன, குமார வெல்கம , தினேஷ் குனவர்தன, ஜனக பண்டார தென்னகோன், உதய கம்மன்பில உள்ளிட்டவர்களும் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இல்லத்திலும், இல்லத்துக்கு முன்பாகவும் கூடினர். பிக்குகள் உள்ளிட்ட சர்வ மத குருமாரும் அங்கு வருகை தந்தனர்.
வீட்டில் இருந்து வெளியேறிய மஹிந்த:
நேற்று முர்பகல் 10.00 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அத்தியாவசிய கருமம் ஒன்றுக்காக செல்வதாக கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவ்வேளையில் வீட்டில் இருந்து வெளியேறிச் சென்றார்.
சி.ஐ.டி.யின் வருகையும், மஹிந்தவின் வருகையும்
அதன் பின்னர் நேற்று முற்பகல் 11.20 ஆகும் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்துக்கு 61 – 7451 என்ற நீல ஜீப் வண்டியில் வருகை தந்தனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ். திசேராவின் தலைமையில் பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா உள்ளிட்ட ஐவர் இவ்வாறு வருகை தந்தனர்.
வீட்டில் இருந்து வெளியேறிய மஹிந்த, சி.ஐ.டி.யினர் வருகை தந்து 10 நிமிடங்களின் பின்னர், முர்பகல் 11.33 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவுடன் வீடு திரும்பினார். இதனையடுத்து அவரிடம் முற்பகல் 11.40 முதல் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணைக்கு உட்படுத்தப்ப்ட்ட விடயங்கள்
கீத் நொயார் கடத்தப்பட்ட சில நிமிடங்களில், அப்போதைய நேஷன் பத்திரிகை ஆசிரியர் அப்போதைய அமைச்சரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை அழைத்தமை தொடர்பிலும் அதன் பின்னர் கரு ஜயசூரிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்தமை தொடர்பிலும் , அதன்பின்னர் மஹிந்த – கோத்தா, கோத்தா – கபில ஹெந்த விதாரண, ஹெந்த விதாரண – அமல் கருணாசேகர, அமல் கருணாசேகர – மேஜர் புளத்வத்த ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு குற்றப் புலனயவுப் பிரிவினரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
‘ கீத் நொயார் கடத்தப்பட்ட பின்னர் அப்போதைய நேஷன் பத்திரிகை ஆசிரியர் கிரிஷாந்த குரே, முதலில் அப்போதைய அமைச்சரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை தொடர்புகொண்டுள்ளார்.
கரு ஜயசூரியவின் வீட்டு தொலைபேசி இலக்கமான 0112552072 இற்கு அழைத்தே அவர் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து கரு ஜயசூரிய முன்னாள் ஜனடஹிபதியான உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கமான 0114733200 எனும் சி.டி.எம். இலக்கத்துக்கு அழைத்து தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து நீங்கள் , கோத்தாபாயவுக்கும் , கோத்தா ஹெந்த வித்தாரணவுக்கும், ஹெந்தவித்தாரண – 8 ஆம் சந்தேக நபர் அமல் கருணாசேகரவுக்கும் அழைத்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்தே கீத் நொயார் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் உங்கள் விளக்கம் என்ன?’ என சி.ஐ.டி.யினர் மஹிந்தவிடம் தொலைபேசி வலையமைப்பு தகவல்களையும் காட்டி கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் கீத் நொயார் கடத்தப்பட்ட போது உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்த போது வெளிப்பத்தப்பட்ட விடயங்களும் முன்னாள் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது. .
‘ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட இரவில் நேஷன் பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் லலித் அழககோன், உரிமையாளர் கிரிஷாந்த குரே ஆகியோர் என்னை தொடர்புகொண்டனர்.
கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை எப்படியேனும் மீட்டுத்தருமாறும் அவர்கள் என்னிடம் கோரினர். அதனையடுத்து நான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைத்தேன்.
அவரிடம், கீத் நொயார் கடத்தப்பட்டுள்ளார். நிச்சயம் இது திட்டமிட்ட நடவடிக்கை. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தில் இருக்க வெட்கப்படுகின்றேன்.
கீத் நொயாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படக் கூடாது. அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அமைச்சுப் பதவியை துறந்து, பிரசித்தமாக காரணத்தை அறிவித்துவிட்டு அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுவேன். எனக் கூறினேன்’ என்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் வாக்கு மூலத்துக்கும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
எனினும் அனைத்து கேள்விகளுக்கும் சமாளிக்கும் வண்ணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் திரும்பிய சி.ஐ.டி.:
இந் நிலையிலேயே வாக்கு மூலத்தை பதிவு செய்துகொண்ட குற்றப் புலனயவுப் பிரிவினர் பிற்பகல் 2.00 மனிக்கு அங்கிருந்து திரும்பினர்.