அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான யுவதி!
24 Jan,2017
அவுஸ்திரேலியாவில் இலங்கையரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான யுவதி!
அவுஸ்திரேலியாவில் மானுஸ் தீவு அகதிகள் முகாமில் ஈழத்தைச்சேர்ந்த ஒருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று லோரெங்கோ நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது மறுவிசாரணைக்கான திகதியின்றி பிற்போடப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் ரஜீவ் ராஜேந்திரன் என்ற 31 வயதான இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீதே குறித்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 17ஆம் திகதி மானுஸ் தீவின் லோரெங்கோ பொது சந்தைக்கு வந்த 18 வயதான யுவதி ஒருவரை கடத்திச் சென்று, அந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கடத்தி வைத்துள்ளார்.
பின்னர் 3 தடவைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதுடன், கடுமையாக தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த யுவதி அங்கிருந்து தப்பிச் சென்று, அவரது உறவினர் ஒருவரது இல்லத்தில் தஞ்சமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது