சவுதி விமான நிலையத்தில் டுரோன் தாக்குதல்: 10 பேர் படுகாயம்
09 Oct,2021
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டுரோன் தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடக்கிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் களமிறங்கி உள்ளன.
இந்நிலையில் நேற்று, சவுதியின் தெற்கு நகரமான ஜிசானில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டுரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் விமான நிலையத்தின் சில முகப்பு கண்ணாடிகளும் உடைந்துள்ளன.இதேபோல், கடந்த ஆக., 31ம் தேதி, சவுதி அரேபியாவின் ஆபா விமான நிலையத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டுரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.