
ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது.
சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வகையில், ஒடுக்கப்படும் பிரிவினர் தகுந்த நேரம் பார்த்து ஆதிக்கவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தி நிலைகுலையச் செய்கின்றனர். இத்தகைய வன்முறை தாக்குதல்களில் இருதரப்பிலும் இது வரை லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, ஐ.எஸ்.போராளிகளும் ஈராக்கில் சமீபகாலமாக ஏராளமான வன்முறை தாக்குதல்களை நிகழ்த்தி பல உயிர்களை கொத்தும், குலையுமாக பறித்து வருகின்றனர்.
ஆயுத பலம் மூலம் மொசூல் நகரை கைப்பற்றி, அதனை தலைமைபீடமாக அமைத்துக் கொண்டு, ஈராக்கின் இதர பகுதிகளையும் ஐ.எஸ்.படையினர் மெல்ல, மெல்ல கைப்பற்றி வருகின்றனர். கடந்த 11-ம் தேதி ஐ.எஸ்.போராளிகளின் வசமாகிய டியாலா மாகாணத்தின் ஜலவ்லா பகுதியை அமெரிக்க விமானப் படையின் உதவியுடன் குர்திஷ் போராளிகள் இன்று கைப்பற்றினர்.
இந்நிலையில், டியாலா மாகானத்தின் ஹம்ரீன் பகுதியில் உள்ள சன்னி பிரிவினரின் மசூதி ஒன்றுக்குள் இன்று புகுந்த ஷியா போராளிகள், உள்ளே இருந்த மக்களை இயந்திர துப்பாக்கிகளால் துளைத்தெடுத்தனர்.
இந்த திடீர் தாக்குதலில் 70 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் சுமார் 60 சதவீதம் ஷியா பிரிவினரும், 30 சதவீதம் சன்னி பிரிவினரும், 10 சதவீதம் குர்த் இன மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்களும் பெரும்பான்மை இனமான ஷியா பிரிவனர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் செயல்பட்டுவரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு அங்கும், சிரியாவிலும் சன்னி பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும் முனைப்புடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துவரும் இந்தப் போராட்டத்தினால் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்துவ மற்றும் யசிதி சிறுபான்மை சமூகத்தினரில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடந்த மாதமே பிரான்ஸ் அரசு இவ்வாறு வெளியேறும் கிறிஸ்துவர்களுக்கு தங்கள் நாட்டில் இடம் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் ஈராக் சென்றிருந்த அரசு விமானம் திரும்பி வரும்போது அதில் அங்கிருந்து 40க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ சமூகத்தினர் கடந்த வியாழன் அன்று பிரான்ஸ் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
இவர்களை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரென்ட் ஃபேபியஸ் வரவேற்றார். இவர்கள் தங்கள் வாழ்வில் அச்சுறுத்தல்களைச் சந்தித்ததாக ஃபேபியஸ் அப்போது குறிப்பிட்டார்.
இவர்களில் பலருக்கு பிரான்சில் உறவினர்கள் உள்ளதாகவும் இருப்பினும் 10, 15 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அகதிகளின் எண்ணிக்கை விரைவில் பல ஆயிரமாக மாறும் என்றும் அமைச்சர் கூறினார்.
இஸ்லாமிய மதத்திற்கு மாறவேண்டும் என்றும் இல்லையெனில் மரணத்தை எதிர்நோக்கவேண்டும் என்று தீவிரவாத இயக்கத்தினர் தங்களை அச்சுறுத்தி வருவதாக இந்தக் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.