மகாராஷ்டிரா | வெடிபொருள் உற்பத்தி நிறுவனத்தில் வெடிவிபத்து - 15 பேர் உயிரிழப்பு
01 Mar,2026
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள SBL எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுரங்கங்கள் மற்றும் தொழில்துறையினருக்கான வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் நாக்பூர் மாவட்டம், காடோல் வட்டம், ரால்கோன் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவல்களை நாக்பூர் காவல் கண்காணிப்பளர் ஹர்ஷ் போடார் உறுதிப்படுத்தி உள்ளார்.
நாக்பூர் கிராமப்புற காவல் அதிகார வரம்புக்கு உட்பட்ட SBL எனர்ஜி லிமிடெட் நிறுவன வளாகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.