கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
26 Feb,2026
அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தாக்கியுள்ள மிக மோசமான பனிப்புயல் காரணமாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 9:00 மணி முதல் அந்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
நகரிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரதப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர சேவைகளைத் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவையாளர்கள் மற்றும் அனர்த்த நிவாரணப் பிரிவினரின் வாகனங்களைத் தவிர, ஏனைய தனியார் வாகனங்கள் வீதிகளில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகர மேயர் சொஹ்ரான் மம்தாணி விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி, மக்கள் அனைவரும் தங்களது பயணங்களைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பனிப்புயல் இன்று திங்கட்கிழமை மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரத்திற்குப் பனிப்பொழிவு இருக்கும் என்றும், இத்தகையதொரு பாரிய பனிப்புயல் பல ஆண்டுகளுக்குப் பின்னரே ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.