கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி!
07 Feb,2026
கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை புறக்கணித்து, ஆபத்தான முறையில் பயணித்தபோது, திடீரென பாதுகாப்புப்படையின் கப்பலுடன் மோதியதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மோதலின் பின்னர், அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியதுடன், அதில் பயணித்த அனைவரும் கடலில் வீழ்ந்தனர். உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு கடலோர காவல் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சியோஸ் ஸ்கைலிட்சியோ (Skylitseio) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காயமடைந்த பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுடன் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்களின் உடற்கூறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிர்தப்பியவர்கள் கிரீஸ் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலின்படி, குறித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.