சீரற்ற வானிலையால் யாழில் 4,140 பேர் பாதிப்பு - யாழ். மாவட்ட அரச அதிபர்
28 Nov,2025
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 28/11/2025 பி.ப 6 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,297 குடும்பங்களை சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலக பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 அங்கத்தவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அரியாலை உவர் நீர் தடுப்பணை தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணை அராலி உவர் நீர் தடுப்பணையின் கதவுகள் திறக்கபட்டுள்ளதுடன், தேவைக்கேற்ற வகையில் மேலதிக கதவுகள் திறப்பதற்குரிய தயார்நிலையில் இருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறியத்தரப்பட்டுள்ளது. எனவே இத்தடுப்பணைகளிற்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்தான சகல படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது,
காரைநகர் பாலத்திலே கடல் அலை மேவுவதனால் பொதுமக்கள் அவதானத்துடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிரதேச செயலாளர் அல்லது கிராம சேவையாளரின் உதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணித் தாய்மார்கள் பாதுகாப்பான முறையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளிற்கு சென்று தங்குமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ் இடர்காலப்பகுதியில் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.