பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து: 21 படுகாயம்
21 Nov,2025
பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அமேசான் பகுதியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, நவம்பர் 10 முதல் 21 வரை நடக்கிறது. இந்த காலநிலை மாற்ற உச்சிமாநாடு பிரேசிலின் பெலேம் நகரில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த அரங்கில் நேற்றைய தினம் புதைபடிவ எரிபொருள்கள், காலநிலைக்கான நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்தான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
மாநாடு நிறைவடைய ஒரு நாள் மட்டும் இருந்த பட்சத்தில், காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட 50,000க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு அங்கிருந்து வெளியேறினர். இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அரங்கின் ப்ளூஸோன் என்றழைக்கப்படும் பகுதியில் தீப்பற்றியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. இந்த தீ விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் பிரேசிலின் சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார்.