இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சுமார் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக கைபர் பக்துன்க்வா மாகாணம் இருக்கிறது. இப்பகுதியில் மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.பாகிஸ்தான் வெள்ள பாதிப்புகளை சந்திப்பது இது முதல்முறை கிடையாது. கடந்த 2022ம் ஆண்டும் இதேபோன்ற வெள்ள பாதிப்பை எதிர்கொண்டது. அப்போது உயிரிழப்பகள் அதிகமாக இருந்தன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 1,000 பேர் இறந்திருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் இக்தியார் கான் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். ARY நியூஸ் வெளியிட்ட செய்தியில், இந்த நிலைமை ஒரு பெரிய மனித துயரம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அவர் பெரும் அழிவை கண்டதாகத் தெரிவித்தார்.
"முழு கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பனர் பகுதியின் சகார்சி பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது, பஷோனி கிராமம் வரைபடத்திலிருந்தே முற்றிலுமாக மறைந்துவிட்டது" என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
வெள்ளநீர் கொண்டுவந்த சில பாறைகள் லாரிகளை விட பெரியதாக இருந்தன என்றும், நதிக்கரைகளில் இருந்த வீடுகள் தடம் தெரியாமல் மறைந்துவிட்டன என்றும், முழு குடும்பங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன என்றும் இக்தியார் கூறினார். அதிகாரப்பூர்வ தகவல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்ட சடலங்களை (சுமார் 300) மட்டுமே பிரதிபலிக்கின்றன என்றும், பல உயிரிழப்புகள் இன்னும் பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திர் பகுதியில் மட்டும் இறப்புகளின் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டக்கூடும் என்றும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் இக்தியார் எச்சரித்தார். "கூட்டமாக சடலங்கள் புதைக்கப்படுகின்றன. இந்த பேரழிவை என் கண்களால் பார்த்த பிறகு கனத்த இதயத்துடன் பனரிலிருந்து திரும்பி வந்துள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, ஜூன் 26 முதல் நாடு முழுவதும் மழை மழை பாதிப்புகளால் குறைந்தது 657 பேர் இறந்துள்ளனர். இதில் 392 ஆண்கள் அடங்குவர். மேலும், 929 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 171 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் ஆவர். காயமடைந்தவர்களில் 437 ஆண்கள், 256 குழந்தைகள் மற்றும் 236 பெண்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்புடைய அபாயங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாகாண அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அது கூறியது.
கைபர் பக்துன்க்வா மாகாணம் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு 390 பேர் உயிரிழந்துள்ளனர்; இதில் 288 ஆண்கள், 59 குழந்தைகள் மற்றும் 43 பெண்கள் அடங்குவர். மேலும், 245 பேர் காயமடைந்துள்ளனர்; இவர்களில் 161 ஆண்கள், 45 குழந்தைகள் மற்றும் 39 பெண்கள் ஆவர்.