முதலில் நிலநடுக்கம்.. இப்போது மிக பெரிய எரிமலை வெடித்து சிதறியது! ரஷ்யாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி
01 Aug,2025
ரஷ்யாவில் நேற்று புதன்கிழமை காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரு அதிர்ச்சிகளில் இருந்து மக்கள் மீள்வதற்குள் ரஷ்யாவில் மிகப் பெரிய எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏகப்பட்ட விஷயங்கள்
நடந்துவிட்டது. புதன்கிழமை காலை முதலில் ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிக வலிமையான இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமியும் ஏற்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ரஷ்யாவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியிருக்கிறது.
யூரேசியாவின் மிக உயரமான ஆக்டிவ் எரிமலையான க்ளூச்செவ்ஸ்காய் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இந்த எரிமலை இப்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் நேற்று காலை தான் 8.8 ரிக்டர் அளவிலான பெரிய பூகம்பம் ஏற்பட்ட நிலையில், சில மணி நேரத்தில் இந்த எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
ரஷ்ய அறிவியல் கழகத்தின் யுனைடெட் புவி இயற்பியல் சேவை இந்த எரிமலை வெடிப்பை உறுதி செய்துள்ளது. எரிமலையின் மேற்கு சரிவில் எரியும் லாவா வெடித்துச் சிதறுகிறது. எரிமலை முழுக்க தொடர்ந்து வெடித்துச் சிதறி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எரிமலை பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- காம்சட்ஸ்கியிலிருந்து வடக்கே சுமார் 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இந்த எரிமலை சமீபத்திய ஆண்டுகளில் பல முறை வெடித்துள்ளது. இதனால் இந்த க்ளூச்செவ்ஸ்காய் எரிமலை சுற்றுலாப் பயணிகளிடையேயும் பிரபலமான ஒன்று. அந்த பிராந்தியத்திற்குச் சுற்றுலா செல்லும் பலரும் க்ளூச்செவ்ஸ்காய் எரிமலையைச் சென்று பார்ப்பார்கள். இப்போது எரிமலை வெடித்துக் கொண்டிருந்தாலும், க்ளூச்செவ்ஸ்காய் எரிமலை பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்யவில்லை. மாறாக இந்த காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகப் பார்க்க வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 13 அடி உயரம் வரை சுனாமியைத் தூண்டியது.
இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் பரவலான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதில் பலர் காயமடைந்தனர். இருப்பினும், நல்வாய்ப்பாக ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. நிலநடுக்கம் 1952க்குப் பிறகு இப்பகுதியில் ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் கடலில் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சுமார் 1.6 லட்சம் மக்கள் இருக்கும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து தென்கிழக்கே 119 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
.
மக்கள் பீதி விடியற்காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கட்டிடங்களைக் கடுமையாக உலுக்கி பீதியை ஏற்படுத்தியதாக மக்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறுகையில், "கட்டிடம் மிக மோசமாக அதிர்ந்தது.. சுவர்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்பது போலத் தோன்றியது. இந்த நடுக்கம் மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடித்தது" என்று கூறினர்.