நியூயார்க் நகரை உலுக்கிய துப்பாக்கிச்சூடு; போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் பரிதாப பலி:
30 Jul,2025
நியூயார்க் நகரில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள பார்க் அவென்யூவில் என்.எஃப்.எல் மற்றும் பிளாக்ஸ்டோன் போன்ற முக்கிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்குள்ள பெரிய கார்ப்பரேட் அலுவலகக் கட்டிடத்திற்கு அருகே நீளமான துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினார்.
இதில், அப்பகுதியில் நின்றிருந்த போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். குண்டு துளைக்காத ஆடைகள் அணிந்த நூற்றுக்கணக்கான போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், ட்ரோன் பிரிவினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். அலுவலகம் முடியும் பரபரப்பான நேரத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் அப்பகுதியை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் என்ன என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.