விமானப்படை தளத்தை ட்ரோன்கள் மூலம் நொறுக்கியது உக்ரைன்
01 Jun,2025
B
ரஷ்யாவின் மறு முனையில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ட்ரோன்கள் இன்று வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளன. பல ஆயிரம் கி.மீக்கு அப்பால் உள்ள இலக்கை உக்ரைன் துல்லியமாக தாக்கி அழித்திருப்பது ரஷ்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள அந்நாட்டு விமானப்படை தளம் மீது உக்ரைன் இன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-லிருந்து இந்த விமானப்படை தளம் சுமார் 6,000 கி.மீ தொலைவில் இருக்கிறது. இவ்வளவு தொலைவில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன்,
ட்ரோன்கள் மூலம் துல்லியமாக தாக்கியிருப்பது ரஷ்ய ராணுவத்திற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. Also Read "சீனா+ ரஷ்யா உலகிற்கே ஆபத்து! 100 வருடத்தில் இப்படி ஒன்று நடந்ததே இல்லை! பறந்த சீக்ரெட் ரிப்போர்ட்" இந்த தாக்குதலில் சுமார் 40 விமானங்கள் சேதமடைந்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. இர்குட்ஸ்க் பிராந்தியத்தின் ரஷ்ய ஆளுநர் இந்த தாக்குதல் நடந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். கிழக்கு சைபீரிய நகரமான பெலாயா, பின்லாந்துக்கு அருகிலுள்ள ஒலென்யா,
மாஸ்கோவின் கிழக்கே உள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவோவில் உள்ள ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது தாக்குதலின் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த போரில் உக்ரைன் இந்த அளவுக்கு ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபட்டது இதுதான் முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது. இதில், ரஷ்யாவின் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 ரக விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் எதிர் நாட்டின் மீது குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களாகும்.
ரஷ்யாவின் நீண்ட தூர தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானங்களை அழிப்பதற்கு உக்ரைன் தனி திட்டம் ஒன்றை தீட்டியிருந்தது. இதற்கு 'ஸ்பைடர் வலை' என்றும் பெயரிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் அப்படையில்தான் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு ஏறத்தாழ ஓராண்டு காலம் உக்ரைன் ராணுவம் திட்டமிட்டிருந்தாகவும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு ட்ரோனும் தொடர்ந்து 6,000 தொலைவுக்கு பறக்காது. எனவே மரக்கட்டைகளை ஏற்றி செல்லும் லாரியில் இந்த ட்ரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த லாரிகள் விமானப்படை தளத்தை நெருக்கியபோது, உக்ரைனிலிருந்து ஆப்ரேட் செய்யப்பட்டிருக்கிறது.
எதிர்பார்த்தபடி எல்லாமும் சரியாக நடந்ததால், ரஷ்யாவின் விமானப்படைத்தளம் கடுமையான சேதத்தை சந்தித்திருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த தாக்குதல் ரஷ்யாவை கடுமையாக சீண்டும். பதிலுக்கு ரஷ்யா நடத்தும் தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.