ரஷ்ய நாட்டில் மர்மமான ரத்த வைரஸ் காய்ச்சல் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வெப்பத்துடன் காய்ச்சல், இருமினால் ரத்தம் வருவது உள்ளிட்ட அபாயமான அறிகுறிகளுடன் ரஷ்ய மக்களிடம் இந்த மர்ம வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதை அந்த நாட்டு அதிகாரிகள் மறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020, 2021 வருடங்களில் கொரோனா வைரஸ் ஆடிய கோர தாண்டவத்தில் இருந்தே உலகம் முழுவதுமாக மீளவில்லை. இப்போது வரை மக்களின் உடல்நலம், பொருளாதாரம் என்ற பல்வேறு வகைகளில் அதன் பாதிப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டில் மற்றொரு கொடிய வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியுள்ள தகவல் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய மக்களிடம் சமீப காலமாக ஒரு மர்ம வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்படி, அதீத உடல் வெப்பத்துடன் மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கூடவே இருமலும் வருகிறது. இருமும்போது ரத்தம் வெளியாகிறது. இது அந்த நாட்டில் மருத்துவ அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம வைரஸ் பரவும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என்று தான் வந்துள்ளது. இதை அந்த நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு மறைப்பதாகவும் புகார்
உள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள், "பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்ததில் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. அதனால் இதை அடையாளம் தெரியாத மர்ம வைரஸ் என்று சொல்ல முடியாது." என்று கூறியுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு 39 டிகிரி வெப்பத்தில் காய்ச்சல் வருகிறது. இருமும்போது ரத்தம் வெளிப்படுகிறது என்று அந்த நாட்டு ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் தற்போது உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி அச்சத்தை உருவாக்கியுள்ளது
R
இதுகுறித்து ரஷ்ய நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், "ரஷ்யாவில் புதிய அல்லது மர்மமான வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மார்ச் 29 ஆம் தேதி டெலிகிராமில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அதில், அலெக்ஸான்டிரா என்ற பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக அவரின் படத்துடன் கூறப்பட்டது. இதை சுமார் 4,30,000 பேர் பார்வையிட்டுள்ளனர். அந்தப் பதிவில் மேலும், ரஷ்யாவில் மர்மமான வைரஸ் பரவுகிறது. இது பாதிக்கப்பட்டவுடன் அதிக வெப்பத்துடன் காய்ச்சல், 2 வாரங்களுக்கு தொடர் இருமல், இருமினால் ரத்தம் வருவது என்று மோசமான அறிகுறிகள் உள்ளன.
இந்த வைரஸ் பாதித்த பெரும்பாலானோருக்கு இதே அறிகுறிகள் தான் உள்ளன. ஆரம்பத்தில் சாதாரண உடல் சோர்வு போல இருந்தாலும் நாளடைவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. படுக்கையில் இருந்து எழுந்திரிக்கவே முடியாது." என்று கூறியுள்ளனர். மேலும் அதில் அலெக்ஸான்டிராவும் பேசுகிறார். "அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விவரிக்கிறார். ஐந்து நாட்களுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. கொரோனோ பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருப்பினும் உடல் மிகவும் சோர்வாக உள்ளது. தசைகளும் வலிக்கின்றன. இதேபோல பலருக்கும் அறிகுறி உள்ளது." என்று கூறுகிறார்.
மருத்துவர்கள், "இது மேல் சுவாச குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்பு. விளைவுகள் மோசமடைந்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்." என்று பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட நிமோனியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், இதில் இருந்து மீள்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் சிலர், "இருமலினால் விலா எலும்பு பயங்கரமாக வலிக்கிறது. சாப்பிட கூட முடியவில்லை. காய்ச்சல் சுமார் 3 வாரங்களுக்கு மேலாக இருக்கிறது. இருமல் ஒரு மாதமாகியும் விடவில்லை. கொரோனாவை கூட சற்று எளிதாக கடந்துவிட்டோம். இதை அப்படி கடந்து வர முடியவில்லை." என்று கூறியுள்ளனர். இதனால் மக்கள் உச்சகட்ட பதற்றத்தில் இருந்தாலும் இதற்கான உரிய விளக்கத்தை அந்த நாட்டு அரசு வெளியிடவில்லை என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய சுகாதாரத்துறை, "சைன்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் வைரஸ்கள் தொடர்பான அரசு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. அவர்கள் தான் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
தற்போதுவரை புதிய வைரஸ் பரவுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்க வேண்டாம். உறுதிபடுத்தப்படாத தகவல் வேகமாக பரவுவதால் மக்களிடம் தேவையில்லாத பயம் ஏற்படும். அரசு வெளியிடும் அறிவிப்புகளை சரியாக கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்." என்று கூறியுள்ளது. மற்ற நாடுகளில் உள்ள நிபுணர்களால் ரஷ்யாவில் உள்ள தற்போதைய நிலையை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அங்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலையில் பயங்கர அரசியலும் நடப்பதாக கூறியுள்ளனர். அதேநேரத்தில் ரஷ்யாவில் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.