வெடித்துச் சிதறிய பேட்டரிகள்... தொழிற்சாலை தீ விபத்தில் 22 பேர் பலி
24 Jun,2024
தென்கொரியாவில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 22 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர்.
தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்கு அருகே, பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் லித்தியம் பேட்டரிகள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 22 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் சீன தொழிலாளர்கள் ஆவர்.
இன்று முற்பகல் சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் நகரில் உள்ள தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில், தொழிலாளர்கள் பேட்டரிகளை சோதித்து பேக்கேஜிங் செய்து கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. திடீரென பேட்டரிகள் வெடித்ததை அடுத்து, தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் 18 சீனர்கள், 2 தென் கொரியர்கள் மற்றும் ஒரு லாவோஷியர் அடங்குவர். தென் கொரியாவில் கடுமையான உழைப்பு, குறைந்த ஊதியத்துடனான பணிகளை உள்ளூர் கொரியர்கள் தவிர்த்து விடுவதால் அந்த இடம் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாகவே நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அப்படி சீன பின்னணியிலான தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிந்த பேட்டரி தொழிற்சாலையில் இன்றைய விபத்து நிகழ்ந்துள்ளது.
அரிசெல் என்ற பிரபல பேட்டரி நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் 102 பேர் பணிபுரிந்ததாகவும், விபத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தோருக்கு அப்பால் பலரைக் காணவில்லை எனவும் தெரிய வந்திருக்கிறது. பிரதம மந்திரி ஹான் டக்-சூ, உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் லீ சாங்-மின் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை உடனடியாக பார்வையிட்டனர்.