ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதல்,103 பேர் பலி; 173 பேர் படுகாயம்
03 Jan,2024
தெஹ்ரான்: ஈரானில் காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவின்போது நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 103 பேர் பலியாகியுள்ளனர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம் சுலையானி கொல்லப்பட்டார். தென்கிழக்கு நகரமான கெர்மனில் உள்ள சுலைமானியின் கல்லறை உள்ள இடத்தில் காசிம் சுலைமானியின் 4-ம் ஆண்டு நினைவு விழா நடைபெற்றது. அங்கு பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இன்று கூடியிருந்தனர். அப்போது பயங்கரவாத இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் சுமார் 73 பேர் உயிரிழந்ததாகவும், 173 பேர் மீட்கபட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும், முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 103 பேர் பலியானதாக செய்தி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.