கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பெருந்தொகைப் பணம் தொடர்பில் முக்கியமான தீர்மானம்
18 Jan,2024
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ அறைக்குள்ளிருந்து சிக்கிய பெருந்தொகைப் பணம் குறித்து வழக்குத் தொடர்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 2022ம் ஆண்டின் ஜூலை மாதம் 09ம் திகதி, அவரது உத்தியோகபூர்வ அறைக்குள் இருந்து பெருந்தொகைப் பணம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டது.
ஒருகோடி எழுபத்தி எட்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர், பின்னர் நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக அந்தப் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பணம் எங்கிருந்து வந்தது? சட்டவிரோதமான வழிகளில் பெற்ற பணமா என்பது குறித்து விசாரணைகள் நடத்தவோ, வழக்குத் தொடரவோ உத்தேசம் இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்றைய தினம் (17) கோட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (17) வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனது தீர்மானத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.