கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய நாடு!
13 Jan,2023
200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி இன்று (12) வழங்கியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத, பங்களாதேஷ் மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2021 மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அந்தக்கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டது.
இலங்கை அந்நிய செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், குறித்தக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தது.
புதிய காலக்கெடுவின்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
பங்களாதேஷூம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் உட்பட பல்தரப்பு கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவியை நாடியுள்ளது.
பங்களாதேஷ் மத்திய வங்கியின் தரவுகளின்படி, பங்களாதேஷின் கையிருப்பு 2023 ஜனவரி 11 அன்று 32.52 பில்லியன் டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.