ஈஸ்டர் தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 16 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !
15 Nov,2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவர்களை எதிர்வரும் 29 ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார்.
ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரது கணவர் உட்பட 66 பேரை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட அதேவேளை மீதமுள்ள 63 பேரில் 47 பேர் பிணையிலும் விடுவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை பிணையில் விடுவிக்கப்பட்ட 47 பேரையும் அடுத்தவருடம் ஜனவரி 31 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.