இலங்கை மக்கள் ஒரு கோடி பேரின் நிலை ரொம்ப மோசம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
14 Oct,2022
இலங்கையில் தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களில் சுமார் ஒரு கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டனர் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி பொது மக்களிடம் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் குறித்து பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
2019 ஆம் ஆண்டில் நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 1 கோடியை தாண்டி உள்ளது. அதாவது இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 42 சதவீதம் பேர் வறுமைக்கோட்டின்கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
வேவை இழப்பு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்றவை பொதுமக்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் கொண்டு சென்றுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.