‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணி கேலிக்குரியது! கோட்டாபயவிடம்
07 Nov,2021
அரச தலைவர் செயலணி அமைச்சரவையில் விவாதிக்காமல், நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் அதிகார வரம்பை கேள்விக்கு உள்ளாக்கும் நடவடிக்கை “கேலிக்குரியது” என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது அரச தலைவரின் அரசியலமைப்பிற்கு முரணான செயல் என்பதுடன், நாட்டின் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும். எனவே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை நீக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையொன்றின் மூலம் கோரியுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara thera) தலைமையிலான அரச தலைவர் செயலணியானது தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எந்தவொரு புதிய சட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் அதன் பின்னர், நீதி அமைச்சின் மற்றும் சட்டமா அதிபரின் உதவியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.
அரச தலைவர் செயலணியில் தங்கியிருக்காமல், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது சட்டமா அதிபர் அரச தலைவரிடம் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற அரச தலைவரின் செயலணியை உடனடியாக இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.