முன்னாள் போராளிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறித்து நடவடிக்கை! - ரணில் உறுதி
29 May,2018
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்களான முன்னாள் போராளிகள் இருவரை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர், யாழ். மாவட்டச் செயலகத்தில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே, மேற்கண்டவாறு கூறினார். அதன்போது, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில், இந்த மண்ணிலே உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவதற்கு சகல மக்களுக்கும் உரிமையுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அடுத்து, முன்னாள் போராளிகள் இருவரை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனரென்றுக் கூறினார்.
முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு பெற்ற நிலையில், சமூகத்தோடு இணைந்து, ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பி வாழ்கின்றனரெனத் தெரிவித்த மாவை எம்.பி, அவர்களது கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியாகவும் உள்ளதென்றும், எனவே, விசாரணைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பிரதமரிடம் கோரினார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்புகொண்டுக் கலந்துரையாடிய பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்